‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு நடித்துள்ள ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு ‘சந்திரமுகி 2’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பின் இறுதிநாளில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் இப்படத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்குக் கொண்டு படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE