“கன்டென்ட் தான் கிங்” - ‘போர் தொழில்’ குறித்து ராதிகா மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: “மூன்று வாரங்கள் கடந்தும் ‘போர் தொழில்’ படத்துக்கு ரசிகர்களிடையே ஆர்வம் குறையவில்லை” என நடிகை ராதிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்’. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்துக்கு கிடைத்து வரும் பரவலான வரவேற்பைத் தொடர்ந்து 3 வாரங்களைக் கடந்தும் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருநாள் என் கணவர் வீட்டுக்கு வந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா நிச்சயம் பெரிய ஆளாக வருவார் என்று என்னிடம் கூறினார். மூன்று வாரம் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘போர் தொழில்’ படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்தேன். மழை கொட்டிக்கொண்டிருந்தபோதும், படத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக திரண்டு வந்துகொண்டிருந்தனர். கணவர் சரத்குமார், அசோக் செல்வன், இயக்குநர் விக்னேஷ் ராஜா உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துகள். கன்டென்ட் தான் கிங் என்பதை ‘போர் தொழில்’ நிரூபித்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE