“ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் நானும் சொல்கிறேன். இது ஜனநாயக நாடு. ஆக, யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சி” என்று நடிகர் விஜய் குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “விஜய் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார். நடிகர்கள் பலரும் பொதுநல சேவைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். நானே கூட நடிக்க வந்த காலத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் அவர் கல்விக்காக உதவி செய்திருக்கிறார். நல்ல விஷயம் தானே... வரவேற்கத்தக்க ஒன்று தான்” என்றவரிடம், ‘விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?’ என கேட்டதற்கு, “நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கிறேன். 2026 தேர்தலுக்கான வியூகத்தை வகுத்துக்கொண்டிருக்கிறேன்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் நானும் சொல்கிறேன். இது ஜனநாயக நாடு. ஆக, யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சி” என்றார். ‘2026 தேர்தலுக்கான சமத்துவ மக்கள் கட்சியின் முன்னெடுப்பு என்ன?’ என கேட்டபோது, “2026 தேர்தலுக்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது. நாளைக்கு இருப்போமா என்பதை முதலில் பார்ப்போம்” என்றார்.