“நான் நலமுடன் இருக்கிறேன்” - விபத்து குறித்து சர்வானந்த் விளக்கம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகர் சர்வானந்த் சென்ற கார் நேற்று ஹைதராபாத்தில் விபத்துக்குள்ளானது. இது குறித்து சர்வானந்த் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்பவர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘கணம்’ படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. கடந்த மே மாதம் சர்வானந்த்துக்கு அவரது காதலி ரக்ஷிதா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜூன் 3ஆம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று (மே 28) காலை ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது நடிகர் சர்வானந்தின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து சர்வானந்த் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், “நேற்று காலை என்னுடைய கார் விபத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியாகின. அது ஒரு சிறிய விபத்து. உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் நான் வீட்டில் முற்றிலும் நலமுடன் இருக்கிறேன். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் அன்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE