அஞ்சலி மேனன் இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிக்கவுள்ள படத்தின் மூலம் மீண்டும் நடிப்புலகிற்கு திரும்பியுள்ளார் நஸ்ரியா
மலையாளத்தில் 'பெங்களூர் டேஸ்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் அஞ்சலி மேனன். அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ப்ரித்விராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இதில் பார்வதி மற்றும் நஸ்ரியா இருவருமே நாயகிகளாக நடிக்கவுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு நவம்பர் 1-ம் தேதி முதல் ஊட்டியில் தொடங்கவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்புலகிற்கு திரும்பியுள்ளார் நஸ்ரியா.
ஃபகத் பாசிலோடு திருமணமானதிலிருந்தே, நடிப்பிலிருந்து விலகி இருந்தார் நஸ்ரியா. "தான் நடிப்பது குறித்து எதுவுமே கூறவில்லை. ஆனால், விரைவில் அவர் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகும்" என்று ஃபகத் பாசில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
தற்போது அஞ்சலி மேனன் படத்தின் மூலம் நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்திருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எம்.ஜெயசந்திரன் மற்றும் ரகு தீட்சித் இசையமைப்பாளர்களாகவும், லிட்டில் ஸ்வாயாப் ஒளிப்பதிவாளராகவும், ப்ரவீன் பிரபாகர் எடிட்டராகவும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.