'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை இன்னும் யாருக்கும் விற்கவில்லை என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில், சந்தீப் வாங்கா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'அர்ஜுன் ரெட்டி'. முதல் வாரத்திலேயே ரூ.31 கோடி வசூலித்துள்ளது. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், சர்வதேச அளவில், மொத்தம் ரூ.50 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் ரீமேக் உரிமையை தமிழில் தனுஷும், இந்தியில் ஒரு முன்னணி நிறுவனமும் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தயாரிப்பு தரப்பு இதை மறுத்துள்ளது. "ரீமேக் உரிமைகள் யாருக்கும் விற்கப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியில் ரீமேக் செய்யப்பட்டால், சந்தீப்பே இயக்க ஆர்வமாக இருகிறார்" என் தெரிவிக்கப்பட்டுள்ளது.