சென்னை: யஷ் நடிப்பில் ‘கேஜிஎஃப் 2’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவாகி உள்ளது. இந்தப் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான ஹிண்ட் ஒன்றை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது படக்குழு.
‘சக்தி வாய்ந்த மனிதனால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி. கேஜிஎஃப் 2 மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம்மை கலைத்துவமிக்க பயணத்தில் அழைத்துச் சென்றது. ரெக்கார்டுகளை தகர்த்தது. பார்வையாளர்களின் இதயங்களை வென்றது. உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கதை சொல்லல்’ என ட்வீட் செய்துள்ளது ஹோம்பலே பிலிம்ஸ். இந்த நிறுவனம் கேஜிஎஃப் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்வீட்டோடு சேர்த்து ஒரு வீடியோவையும் ஹோம்பலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் 37-வது நொடியில் ‘1978-81 வரை ராக்கி எங்கே இருந்தார்?’ என அடுத்த பாகத்திற்கு ஹிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
‘கேஜிஎஃப் 2’ படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 1,200 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல். பிரஷாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். தற்போது அவர் பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார்.