ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் நடனமாடாதது ஏன்?

By செய்திப்பிரிவு

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடனமாடாதது குறித்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராஜ்கபூர் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இவ்விழாவில் கலந்துகொண்டு ராம் சரணும் - ஜூனியர் என்டிஆரும் ஆஸ்கர் மேடையில் நடனமாடுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தினர். ஆனால், இந்தப் பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞர்கள்தான் நடனமாடினார். இந்நிலையில், ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் ஆஸ்கர் மேடையில் ஏன் நடனமாடவில்லை என்பது குறித்து ஆஸ்கர் விருது விழாவின் ‘நாட்டு நாட்டு’ ஷோவின் தயாரிப்பாளர் ராஜ்கபூர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் இரண்டு நடிகர்களும் இணைந்து மேடையில் நடனமாடுவதாகத்தான் இருந்தது. அவர்களுடன் பாடர்கள் ராகுல் சிப்ளிகஞ்ச் மற்றும் காலபைவராவும் இணைந்து பாடுவதாக முடிவெடுக்கப்பட்டது. இருவரையும் அமெரிக்கா வரவழைப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் ஆஸ்கர் நிர்வாகம் செய்ததது. ஆனால், பிப்ரவரி மாதம் இறுதியில் இரண்டு நடிகர்களும், ‘நாங்கள் ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்கிறோம். ஆனால் மேடையில் நடனமாடுவது
சிரமம்’ என தெரிவித்தனர்.

வேலைப்பளுவின் காரணமாக இருவராலும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கான ஒத்திகையில் ஈடுபட போதிய நேரமில்லை என தெரிவித்துவிட்டனர். அதனால், இறுதியில் தொழில்முறை நடனக் கலைஞர்களை வைத்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாட வைத்தோம். அவர்கள் இந்தப் பாடலுக்காக 18 மணி நேரம் நடன ஒத்திகை பார்த்த பின் தான் மேடையில் நடனமாடினர்” என்று தெரிவித்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் இரண்டு மாதங்கள் ஒத்திகை பார்க்கப்பட்டு 15 நாட்கள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE