சென்னை: "நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் இந்தியனாகவும், சக கலைஞனாகவும் உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன்" என்று ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் இந்தியனாகவும், சக கலைஞனாகவும் உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன். எம்.எம்.கீரவாணிக்கும், எஸ்.எஸ்.ராஜமவுலிக்கும், ஆர்ஆர்ஆர் அணியினருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்டு உருவான இந்தப் பீரியட் படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது.
பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி, ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார்.