திருவனந்தபுரம்: தன் முன்னாள் காதலர் தன்னை தாக்கி, உடல் ரீதியாக துன்புறுத்தியதாக மலையாள நடிகை அனிகா விக்ரமன் தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘விஷமகாரன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அனிகா விக்ரமன். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது முன்னாள் காதலர் குறித்து பதிவிட்டுள்ள பதிவு மலையாள திரையுலகை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. அந்தப் பதிவில், ”என் முன்னாள் காதலர் அனுப், என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்தார். இவரை போன்ற மனிதரை நான் பார்த்ததே இல்லை. இதை எல்லாம் அவர் எனக்கு செய்வார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
அவர் முதல்முறை என்னை தாக்க்கியபோதே சென்னை போலீஸில் நான் புகார் அளித்தேன். ஆனால், என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதனால் அதனை விட்டுவிட்டேன். புகாரை திரும்ப பெற்றேன். இதைப்பற்றி நான் எதுவும் பேசாமல் இருந்தேன். இரண்டாவது முறை அவர் என்னை அடித்தபோது பெங்களூர் போலீஸில் நான் புகார் அளித்தேன். ஆனால், அவர் போலீஸிடம் பணம் கொடுத்து தப்பித்து விட்டார். போலீஸ் தன் பக்கம் இருப்பதை மனதில் வைத்துக் கொண்டு அவர் என்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார். என் போன்களை அபகரித்து கொண்டு என்னை தொடர்ந்து தாக்கினார்.
நான் அவரை விட்டு விலகினாலும், அவர் என்னை விடவில்லை. அனுப் மாதிரியான ஒருவருடன் காதலில் இருந்ததற்காக என்னை மன்னிக்க எனக்கு ஒரு மாதம் காலம் தேவைப்பட்டது. வாழ்க்கை மிகச் சிறியது, அதனால் நான் யாரையும் மன்னிக்கும் குணத்தை கொண்டிருந்தேன். ஆனால், இந்த மனிதரை நான் மன்னிக்க மாட்டேன். தற்போது மீண்டும் போலீஸில் புகார் அளித்திருக்கிறேன். அனுப் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டார். விசாரணை நடக்கிறது. இதற்கிடையில் எனக்கு வந்த மிரட்டல்கள் காரணமாகத்தான் இந்தப் பதிவை பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளேன். என் உடலிலிருந்த காயங்கள் குணமாகிவிட்டன. தற்போது நான் ஷூட்டிங் செல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.