ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்டு உருவான இந்தப் பீரியட் படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது.
வரும் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் 95வது ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலிலும் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருது விழாவில், ‘நாட்டு நாட்டு’ பாடல் நேரடியாகப் பாடப்படுகிறது. இந்தப் பாடலை பாடிய ராகுல் சிப்லிகுஞ்-சும் காலபைரவாவும் ஆஸ்கர் மேடையில் பாடுகிறார்கள். இதற்காக அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறார்கள்.