நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேரில் சந்தித்துப்பேசினார்.
ஹைதாராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேரில் சென்று அவரை சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் நாகார்ஜூனாவும், சிரஞ்சீவியின் உறவினரும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்தும் உடனிருந்தனர். இதில் இந்திய திரைப்படத்துறையின் வேகமான வளர்ச்சி குறித்தும், திரைத்துறை குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்திப்பைத் தொடர்ந்து நடிகர்கள் சிரஞ்சீவியும் நாகார்ஜுனாவும் இணைந்து மத்திய அமைச்சருக்கு கணபதி சிலையை அன்பளிப்பாக வழங்கினர். இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹைதராபாத் வருகையின் போது எனது வீட்டிற்கு வர நேரம் ஒதுக்கிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நன்றிகள். இந்தியத் திரைப்படத் துறை மற்றும் அதன் வேகமான முன்னேற்றம் குறித்து எனது சகோதரர் நாகார்ஜூனாவுடன் சேர்ந்து நடத்திய மகிழ்ச்சிகரமான விவாதம் மிகவும் பிடித்திருந்தது” என பதிவிட்டுள்ளார்.