கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்திருந்தது. கன்னடத்தில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடியில் உருவான இந்தப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இதன் 100 வது நாள் விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி, “இப்போது வெளியாகியிருப்பது ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம். கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ரிஷப் ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் ‘காந்தாரா 2’ என்ற ஹேஷ்டேக்கை சேர்ந்திருந்தார். இதனால் அவர் அந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஆனால், அதை ஹோம்பாளே நிறுவனத் தரப்பில் மறுத்துள்ளனர். “இந்தச் செய்தி அடிப்படை ஆதாரமற்றது மற்றும் உண்மைக்குப் புறம்பானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.