“நான் என் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால், சினிமா மீதான என் காதல் மட்டும் என்றும் மாறாமல் நிலையாக இருக்கிறது” என நடிகை சமந்தா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
‘யசோதா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘சாகுந்தலம்’. சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஒட்டுமொத்த படத்தையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்ற உள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. அந்த வகையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகை சமந்தா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "வாழ்க்கையில் நான் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் சினிமாவை எவ்வளவு நேசிக்கிறேன், சினிமா என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறது என்பது மட்டும் என் வாழ்க்கையில் எந்த மாற்றமுமின்றி நிலையாக உள்ளது. ‘சாகுந்தலம்’ படத்தின் மூலம் எனக்கும் சினிமாவுக்குமான காதல் இன்னும் வளரும் என நினைக்கிறேன்.
அண்மையில் படத்தைப் பார்த்தேன். அது எனது எதிர்பார்ப்பையும், இயக்குநர் கொடுத்த வாக்குறுதியையும் கடந்து ஈர்த்தது. படம் பார்த்துவிட்டு இயக்குநருக்கு நன்றி சொன்னேன். இந்தப் படம் பார்த்த எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை பார்வையாளர்களும் அனுபவிப்பார்கள்” என்று தெரிவித்தார். படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாகுந்தலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்களைக்காண: சமந்தா ஆல்பம்