பிரபல கலை இயக்குநர் சுனில் பாபு மறைவு: திரையுலகினர் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

பிரபல கலை இயக்குநர் சுனில் பாபு மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 50.

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலை இயக்குநர்களில் ஒருவர் சுனில் பாபு. மைசூரு கலைக் கல்லூரியில் தனது படிப்பை முடித்தவர், தொடக்கத்தில் மலையாள படங்களில் கலை இயக்குநராக பணியாற்றினார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த சுனில் பாபு மலையாளத்தைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

இறுதியாக விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மேலும், கலை இயக்குநர் சாபு சிரிலின் உதவியாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் புகழ்பெற்ற பல்வேறு படங்களில் தனது திறமையை நிரூபித்தவர்.

'துப்பாக்கி', 'பீஷ்ம பர்வம்', 'மகரிஷி', 'ஊப்பிரி', 'கஜினி', 'பிரேமம்', 'சோட்டா மும்பை', ‘சீதாராமம்’, பாலிவுட் படங்களான 'சிங் இஸ் கிங்', 'எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி', 'பா', 'ஸ்பெஷல் 26' உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE