“தலைமுறைகளைக் கடந்து அறியப்பட்டவர்’’ - கைகலா சத்தியநாராயணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

By செய்திப்பிரிவு

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கைகலா சத்தியநாராயணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரைத்துறையில் ஆறு தசாப்தகாலமாக பிரதான நடிகராக வலம் வந்த கைகலா சத்தியநாராயணா 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2011 ரகுபதி வெங்கையா விருது, 2017 ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள், தெலுங்கு சினிமாவுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் ஆந்திரப் பிரதேச அரசின் நந்தி திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெலுங்கு மொழியில் என்டிஆர் காலத்திலிருந்து நடித்து வரும் அவர், சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டார். நாயகனாகவும், வில்லன், குணசித்திர நடிகர் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

திரைத்துறையை தவிர்த்து அரசியலிலும் ஆழம் பார்த்தவர் கைகாலா. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக இருந்தவர், 1998-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான மகேஷ்பாபுவின் ‘மகரிஷி’ என்ற தெலுங்கு படத்தில் பூஜா ஹெக்டேவின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஹைதாராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல திரைப்பட ஆளுமை கைகலா சத்தியநாராயணா மறைவால் வேதனையடைந்தேன். பல்வேறு கதாபாத்திரங்களாலும், சிறப்பான நடிப்புத்திறமையாலும் தலைமுறைகளை கடந்து நன்கு அறியப்பட்டவர். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE