தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கைகலா சத்தியநாராயணா இன்று ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87.
தெலுங்கு திரைத்துறையில் 6 தசாப்தகாலமாக பிரதான நடிகராக வலம் வந்த கைகலா சத்தியநாராயணா 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2011 ரகுபதி வெங்கையா விருது, 2017 ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள், தெலுங்கு சினிமாவுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் ஆந்திரப் பிரதேச அரசின் நந்தி திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெலுங்கு மொழியில் என்டிஆர் காலத்திலிருந்து நடித்து வரும் அவர், சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டார். நாயகனாகவும், வில்லன், குணசித்திர நடிகர் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
திரைத்துறையை தவிர்த்து அரசியலிலும் ஆழம் பார்த்தவர் கைகாலா. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக இருந்தவர், 1998-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான மகேஷ்பாபுவின் ‘மகரிஷி’ என்ற தெலுங்கு படத்தில் பூஜா ஹெக்டேவின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.