பிரபல இயக்குநர் ராஜமவுலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத். ராஜமவுலி இயக்கும் படங்களின் கதைகளை எழுதுபவர் இவர்தான். ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களின் கதைகளை எழுதியுள்ள இவர், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரை எழுத்து பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கதை எங்கும் இருக்கிறது. கதை எழுதுவது என்பதே சரியான பொய்யை சொல்வது என்பதுதான். நான் கதைகளை எழுதுவதில்லை. திருடுகிறேன். உங்களைச் சுற்றி கதைகள் இருக்கிறது. மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள், நிஜ வாழ்க்கை சம்பவங்கள் உட்பட பல இடங்களில் இருக்கிறது கதைகள். அதைத் தனித்துவமான முறையில் நீங்கள் பிரதிபலிக்க வேண்டும்.
நான், என் கதை மற்றும் கேரக்டர்கள் பற்றிய ஆவலை ரசிகர்களுக்குத் தூண்ட முயற்சிக்கிறேன். அது தனித்துவமான, ஈர்க்கக்கூடிய ஒன்றை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், உங்கள் கதைகளுக்கு நீங்கள் சிறந்த விமர்சகர்களாக இருங்கள். அது உங்களை உயரத்துக்குக் கொண்டு செல்லும்.
இவ்வாறு விஜயேந்திர பிரசாத் கூறினார். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.