தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். வினோத் கண்ணாவின் ’பரம்பரா’, ஷாருக்கானின் ’ஜாகத்’, கோவிந்தாவின் ’பனாரஸி பாபு’, அமிதாப்புடன் ’படே மியான் சோட்டே மியான்’ உட்பட சில இந்திப் படங்களில் நடித்துள்ளார். இப்போது 'லைகர்' படத்தில் நடித்துள்ள அவர், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்காதது ஏன் என்பதைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தபோதும் இந்தி சினிமாவில் எனக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. நான்நடித்த படங்கள் ஓடவில்லை. தென்னிந்திய சினிமாவை விட்டுவிட்டு முழுவதுமாக பாலிவுட்டில் போராடும் தைரியம் எனக்கு இல்லை. ஒரு துறையில் அதிக படங்களில் நடிக்க, வெற்றி அவசியம். இந்தியில் துரதிர்ஷ்டவசமாக எனக்கு அது நடக்கவில்லை.
தமிழ், தெலுங்கில் நடிப்பது வசதியாக இருந்ததால், இந்திக்கு மீண்டும் செல்லவில்லை. கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில்மேகி என்ற கேரக்டரில் நடித்தேன். வரவேற்பு கிடைத்தது. ரஜினியின் ‘படையப்பா’வில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தேன். இவை அதிக வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தன. இவ்வாறு ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்