'ஆச்சார்யா' படம் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத நிலையில், தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடு செய்யுமாறு சிரஞ்சீவியிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம சரண் இணைந்து நடித்த படம் 'ஆச்சார்யா' . தந்தை, மகன் இருவரும் இணைந்து நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான கொரடாலா சிவா இந்த படத்தை இயக்கி இருந்தார். இதற்கு முன் மகேஷ் பாபுவை வைத்து 'பரத் அனே நேனு', ஜுனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து 'ஜனதா கறகே' போன்ற படங்களை இயக்கியவர். ராம்சரண் தயாரிப்பில் வெளியான இப்படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியானது. ஆனால், வெளியான முதல் நாளே எதிர்மறை விமர்சனங்களை பெற்றதால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் குறைந்தது.
இந்நிலையில், இந்த படத்தினால் ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்யுமாறு சிரஞ்சீவியிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்கோபால் பஜாஜ் என்ற விநியோகஸ்தர், சிரஞ்சீவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'ஆச்சார்யாவால்' ஏற்பட்ட கணிசமான நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு கோரியுள்ளார். இந்த படத்தால் தனக்கு 75% வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட பண நெருக்கடியை ஈடுக்கட்ட உதவுமாறும் கோரியுள்ளார்.
பிரபல விநியோகஸ்தர் வாரங்கல் ஸ்ரீனு, கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தின் விநியோக உரிமையைப் பெற்றிருந்தார். அவர் எழுதிய கடித்தத்தில் சிரஞ்சீவியிடம் 'ஆச்சார்யா' படத்தின் மந்தமான வரவேற்பால் விநியோகஸ்தர்கள் கலக்கமடைந்துள்ளனர்.நான் இப்போது மிகுந்த கடனில் இருக்கிறேன்," என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
» விஜய் 66 அப்டேட் | படத்தில் இணைந்த 3 பிரபல நடிகர்கள்
» 'தாயின்றி ராக்கியில்லை' - கேஜிஎஃப் வழி நின்று பேசும் அன்னையர் தின பகிர்வு
இந்தக் கடிதம் ஒட்டுமொத்த நிலவரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் 'ஆச்சார்யா' பட விநியோகஸ்தர்கள் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் 60 சதவீதம் வரை நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் சிரஞ்சீவியின் பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.