'விடிவி'-யில் கவனம் ஈர்த்த மலையாள நடிகர் பிரதீப் மரணம்

By செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.

2001ஆம் ஆண்டு தனது 40வது வயதில் ஐ.வி. சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகின் அறிமுகமான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

‘ராஜமாணிக்யம்’, ‘2 ஹரிஹர் நகர்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை பிரபலம். 2016ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ஏசியாநெட் காமெடி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தன. அதன் தாக்கமாக அதே போன்றதொரு கதாபாத்திரத்தை இயக்குநர் அட்லீ தனது ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் அவருக்கு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு கேரள திரையுலகத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE