இயக்குநர் ஷங்கரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் மகேஷ் பாபு. ஏன் என்பதற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
‘ஆஹா’ ஓடிடி தளத்தில் ‘Unstoppable’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் பாலகிருஷ்ணா. இந்த நிகழ்ச்சி தெலுங்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பாலகிருஷ்ணாவுடன் உரையாடி வந்தார்கள். இதன் கடைசி நிகழ்ச்சியில் மகேஷ் பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார் மகேஷ் பாபு. அதில் இயக்குநர் ஷங்கரிடம் மன்னிப்புக் கேட்ட விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார்.
ஷங்கரிடம் மன்னிப்புக் கேட்ட நிகழ்வு குறித்து மகேஷ் பாபு கூறியது: “ஒரு முறை மும்பைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருந்தோம். அப்போது இரண்டு பெண்கள் வந்து என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டனர். குடும்பத்துடன் வந்திருப்பதால் இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் சரி என்று விலகிச் சென்று விட்டனர். அப்போது பக்கத்தில் இருந்தவர், 'சார் அது இயக்குநர் ஷங்கரின் மகள்கள்' என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
» ‘பீம்பாய்’ புகழ் ப்ரவீன் குமார் காலமானார்
» ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு ‘ஜெய் பீம்’ செல்வது உறுதி- ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர் நம்பிக்கை
உடனே அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடிச் சென்றேன். கீழே வரவேற்பு முகப்பில் இயக்குநர் ஷங்கருடன் அவர்கள் இருந்தார்கள். அவரிடம் சென்று, ‘மன்னித்து விடுங்கள், உங்கள் மகள்கள்’ என்று தெரியாது என்றேன். அதற்கு அவர் ‘பரவாயில்லை, நட்சத்திரங்கள் எப்படி இருப்பார்கள், அவர்களின் குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார்கள் என்பதை இவர்களும் தெரிந்துகொள்ள வேண்டாமா’ என்றார். அதன் பின் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்” என்று மகேஷ் பாபு கூறியுள்ளார்.
இயக்குநர் ஷங்கரிடம் மகேஷ் பாபு மன்னிப்புக் கேட்ட நிகழ்வு, தற்போது சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.