நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கரோனா தொற்றால் கவலைக்கிடம்

By ஏஎன்ஐ

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய விருது பெற்றுள்ள நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி என 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தமிழில் 'வரலாறு', 'பரதேசி', 'தானா சேர்ந்த கூட்டம்', 'சர்கார்' உள்ளிட்ட பல படங்களிலும் சில முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

சிவசங்கர் மாஸ்டர் (72) 'பூவே உனக்காக' உள்ளிட்ட சில படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியமைக்காக தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். மன்மத ராசா பாடலுக்கு இவர் அமைத்த நடனம் காரணமாக யார் இவர் என திரும்பிப் பார்க்க வைத்தார். 'மகதீரா' படத்திற்காக தேசிய விருது பெற்றார். 'பாகுபலி' உள்ளிட்ட பிரபல பாடல்களுக்கான அவரது நடன அமைப்புகளின் பட்டியல் மிகவும் நீளமானது.

கரோனா தொற்று காரணமாகக் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் மாஸ்டர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவர் தற்போது ஹைதராபாத் ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரால் மருத்துவமனை செலவுகளைச் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அவரது மூத்த மகனும் அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE