புதிய டிஜிபியுடன் ஒப்பிட்டு மீம்ஸ் - மலையாள நடிகர்  செம்பில் அசோகன் மகிழ்ச்சி

மலையாள திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் செம்பில் அசோகன். இவர் 2009ஆம் ஆண்டு முதல் மலையாள சினிமாக்களில் நடித்து வருகிறார். ‘அனார்கலி’ , ‘புலிமுருகன்’, ‘கம்மட்டிப்பாடம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (30.06.21) அன்று கேரள மாநிலத்தின் டிஜிபியாக இருந்த லோக்நாத் பஹேராவின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய டிஜிபியாக அனில் காந்த் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அனில் காந்த் பார்ப்பதற்கு மலையாள நடிகர் செம்பில் அசோகன் போலவே இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இருவரும் ஒப்பிட்டு மீம்ஸ்களும் பறந்தன.

இது குறித்து செம்பில் அசோகன் கூறியுள்ளதாவது:

புதிய டிஜிபி பதவியேற்றது முதலே எனது செல்பேசிக்கு வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. பலரும் என் புகைப்படத்தை புதிய டிஜிபியுடன் ஒப்பிடுவதாக எனது நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். நான் புதிய டிஜிபி அனில் காந்த்தை சந்திக்க விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமா என்று தெரியவில்லை. நான் பல படங்களில் காவல் அதிகாரியாக நடித்திருந்தாலும், ஐபிஎஸ் அதிகாரியாக இன்னும் நடிக்கவில்லை..

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE