எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆர் ஆர் ஆர்’ திரைப்படம் திட்டமிட்டபடி இந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாவது சந்தேகமே என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதியன்று இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நிலவும் கரோனா நெருக்கடி சூழலில் படத்தின் படப்பிடிப்பை நடத்துவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. மேலும் ராம் சரண் ’ஆச்சார்யா’ திரைப்படத்தில் நடித்து வந்ததால் இந்தப் படப்பிடிப்புக்குத் தேதிகள் ஒதுக்கித் தர முடியவில்லை. இவரும் ஜூனியர் என்.டி.ஆரும் சேர்ந்து நடிக்கவேண்டிய காட்சிகளூக்கான படப்பிடிப்பை ஜூலை மாதத்துக்குள் முடிக்க ராஜமௌலி திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குத் தற்போது சாத்தியமில்லை என்று தெரிகிறது.
மேலும், படப்பிடிப்பு முடிந்து கிராஃபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்து அக்டோபர் 13 அன்று படத்தை வெளியிட முடியுமா என்பது சந்தேகமே. இதனால் படம் 2022 பொங்கல் சமயத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகப் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
» அசுரனைத் தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் ஆகும் கர்ணன்
» நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் ஜெய் - சுசீந்திரன் திரைப்படம்
இந்நிலையில் தங்களது 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் ட்விட்டர் பக்கத்தில், கோவிட்-19 குறித்த உண்மையான, அதிகாரபூர்வமான தகவல்கள் பகிரப்படும் என்று இயக்குநர் ராஜமௌலி இன்று ட்வீட் செய்துள்ளார். இன்னும் அந்தப் பக்கத்தில் படம் அக்டோபர் 13 அன்று வெளியாகும் என்றே அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.