உரிய அனுமதி பெறாமல் நடிகை சாக்ஷியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியது தொடர்பான மான நஷ்ட வழக்கில், சாக்ஷி கேட்கும் தொகையைத் தயாரிப்புத் தரப்பு தருவார்களா, இல்லையா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, நானி, அதிதி ராவ் ஹைதரி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான தெலுங்குத் திரைப்படம் 'வி'. பாலிவுட் நடிகை சாக்ஷி மாலிக் என்பவர் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.
சாக்ஷி மாலிக்கிடம் உரிய அனுமதி பெறாமல், அவரது புகைப்படத்தை 'வி' திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். மேலும், திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியைப் பற்றிய வசனமும் இந்தப் புகைப்படம் தோன்றும்போது பேசப்பட்டுள்ளது.
இது தன்னுடைய அந்தரங்க விதிமீறல் என்றும், ஒருவரது தனிப்பட்ட உடமையை முறையான அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், ரூ.30 கோடி நஷ்ட ஈடு கேட்டு, மான நஷ்ட வழக்கொன்றை சாக்ஷி தொடர்ந்திருந்தார்.
» நடிகை புகைப்பட சர்ச்சை: 'வி' திரைப்படத்தை நீக்க அமேசான் ப்ரைமுக்கு உத்தரவு
» சர்ச்சைக்குள்ளான பாடலின் பெயர் மாற்றம்: 'கர்ணன்' இயக்குநர் மாரி செல்வராஜ்
இந்த வழக்கில் சாக்ஷிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் படத்தை அமேசான் ப்ரைமிலிருந்து நீக்க உத்தரவிட்டது. தொடர்ந்து படம் நீக்கப்பட்டு, சாக்ஷி மாலிக் புகைப்படம் இடம்பெற்ற காட்சி நீக்கப்பட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டது. தற்போது சாக்ஷிக்குக் கொடுக்க வேண்டிய மானநஷ்டத் தொகை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
எவ்வளவு தொகை என்பது குறித்து சாக்ஷியும், படத் தரப்பும் இன்னும் ஒரு முடிவை எட்ட முடியவில்லை என்று சாக்ஷியின் வழக்கறிஞர்கள் வழக்கு நடைபெறும் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.படேல், "சாக்ஷி கேட்கும் பணத்தைத் தருவீர்களா, இல்லையா? அவர் கேட்கும் பணத்துக்கும், தயாரிப்புத் தரப்பு முடிவெடுத்திருக்கும் தொகைக்கும் பெரிய வித்தியாசமில்லையே. இதை எளிதில் ஈடுகட்டிவிடலாமே.
இதில் ஒரு முடிவை எட்டினால் இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும் அல்லவா. இதில் இன்னும் ஒரு தீர்மானம் எட்டப்படவில்லை என்றால் வழக்கு ஆரம்பிக்கும். அதில் சாக்ஷி வெற்றி பெற்றால் அவர் கேட்கும் தொகையைத் தர வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
அப்படி கொடுக்கப்படும் தொகையில் சாக்ஷியின் வழக்குக்கான செலவு, நீதிமன்றம் விதிக்கும் கூடுதல் தொகை என அனைத்தும் சேரும். தயாரிப்புத் தரப்பிலிருந்து தொகையை அதிகரிக்கலாம் என்பது குறித்த எந்த வழிகாட்டுதலும் இல்லை என்று அதன் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
எனவே, ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் இதுகுறித்து முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.