'தி ப்ரீஸ்ட்' வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'தி ப்ரீஸ்ட்' படத்தின் வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜோஃபின் டி.சாக்கோ இயக்கத்தில் மம்முட்டி, மஞ்சு வாரியர், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தி ப்ரீஸ்ட்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. பின்பு, கரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்பைத் தொடங்கி முழுமையாக முடித்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

மார்ச் 5-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் படத்திலிருந்து 2 டீஸர்கள் இதுவரை இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதன் முறையாக இந்தப் படத்தில் தான் மம்முட்டி - மஞ்சு வாரியர் இணைந்து நடித்திருப்பது நினைவு கூரத்தக்கது.

படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றும் வரும் வேளையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்போது வெளியீடு என்பதைப் படக்குழு இன்னும் தெரிவிக்கவில்லை. துபாய், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. படக்குழுவினரோ ஒரே சமயத்தில் உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டு இருந்தது.

சில வெளிநாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பது மட்டுமன்றி, கேரளாவிலும் இரவு நேரக் காட்சிக்கு இன்னும் அரசு அனுமதி வழங்கவில்லை. வார இறுதி நாட்களில் குடும்பத்தினர் இரவு நேரக் காட்சிகளுக்குத் தான் வருவார்கள் என்பதால், படக்குழுவினருக்கு இதுவொரு பின்னடைவாக இருந்துள்ளது.

இவை அனைத்தும் கணக்கில் கொண்டு, படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளது 'தி ப்ரீஸ்ட்' படக்குழு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE