'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் மும்முரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரவில் பெரும் சண்டைக் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை ஹைதராபாத்தில் படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு.

இந்நிலையில், இன்று (ஜனவரி 19) முதல் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து வில்லன் ஆட்களுடன் மோதப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தி வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

முதலில் ஜனவரி 8-ம் தேதி வெளியீடாக இருந்தது. தற்போது கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு இன்னும் புதிய வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முடிவு செய்யவில்லை. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE