மீண்டும் தொடங்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பு? 

இன்று முதல் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள், இறுதிக்கட்டப் பணிகள், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என அனைத்துமே கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டதால் குறிப்பிட்ட தேதியில் வெளியீட்டுக்குச் சாத்தியமில்லை என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இன்று (05.10.20) முதல் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் தொடங்கப்படவுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாத காலத்துக்கு இடைவெளி இன்றி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆலியா பட் தொடர்பான காட்சிகள், கிராபிக்ஸ், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த இரண்டு மாத காலத்தில் முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE