நடிகை மியா ஜார்ஜுக்குத் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இதுகுறித்த தகவலை மியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் சின்னத்திரையில் நடித்து, பின் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தவர் மியா ஜார்ஜ். 2010-ம் ஆண்டு மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மியா, 2014-ம் ஆண்டு, 'அமர காவியம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'ஒருநாள் கூத்து', 'வெற்றிவேல்', 'ரம்', 'யமன்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். இன்னொரு பக்கம் தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
சமீபத்தில் இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் ஃபிலிப் என்கிற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மியா ஜார்ஜ், அனைவரின் அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.
"ஒரே ஒரு நபர்தான் திருமணம் செய்து கொள்வது குறித்து என்னை அணுகினார். அவர் அஷ்வின். நான் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தேன்" என்று மியா ஜார்ஜ் கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, கேரளாவின் பலை என்ற பகுதியில் இருக்கும் புனித அந்தோணி தேவாலயத்தில் மியா- அஷ்வின் நிச்சயதார்த்தம் நடந்தது. கோவிட்-19 கட்டுப்பாடுகளால் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். மியாவின் சகோதரி ஜினி ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் நிச்சயதார்த்த காணொலியைப் பகிர்ந்துள்ளார்.
விக்ரமுடன் 'கோப்ரா' திரைப்படத்தில் மியா நடித்துள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படம் கோவிட் பிரச்சினை முடிந்த பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.