'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்புக்கு சஞ்சய் தத் வருவாரா? - படக்குழு விளக்கம்

By செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்புக்கு சஞ்சய் தத் வருவாரா என்ற கேள்விக்குப் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்'. யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதர மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டது.

பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த இந்தப் படத்தின் கதை முதல் பாகத்துடன் முடிவடையவில்லை. அதன் 2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது சஞ்சய் தத் மருத்துவ காரணங்களுக்காகத் திரையுலகிலிருந்து விலகியிருக்கிறார். இதனால் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயலாது. இதன் மூலம் 'கே.ஜி.எஃப் 2' படக்குழுவினருக்குச் சிக்கல் எனத் தகவல் வெளியானது.

சஞ்சய் தத் காட்சிகளின் நிலைக் குறித்து 'கே.ஜி.எஃப் 2' படக்குழுவினரிடம் விசாரித்த போது, "'கே.ஜி.எஃப் 2' படக்குழுவினரிடம் தன்னுடைய நிலைக் குறித்து சஞ்சய் தத் பேசிவிட்டார். தன்னால் அடுத்த 3 மாதங்களுக்குப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். 'கே.ஜி.எஃப் 2' படத்தில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு என்பது கிட்டதட்ட முடிந்துவிட்டது. இன்னும் 3 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே அவருக்கு இருக்கிறது. அதுவும், அவருக்கான க்ளாஸ் அப் மற்றும் நடந்து வரும் சிறுசிறு காட்சிகள் தான்" என்று தெரிவித்தார்கள்.

ஏற்கெனவே அக்டோபர் 23-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துவிட்டது 'கே.ஜி.எஃப் 2' படக்குழு. தற்போது இந்த தேதியில் வெளியீடு சாத்தியமில்லை என்பதால் புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் படக்குழு அறிவிக்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE