ரசிகர்களுக்கு மகேஷ் பாபு வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பிறந்த நாள் வருவதை முன்னிட்டு, ரசிகர்களுக்கு மகேஷ் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி பிறந்த நாளாகும். இப்போதே அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஹைதராபாத்தில் வேறு கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

இதனை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு சிறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபு.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என் அன்பான ரசிகர்களுக்குக் கனிவான வேண்டுகோள்.

நீங்கள் எல்லாம் எனக்குக் கிடைத்திருப்பதை ஆசிர்வாதமாக, நன்றியுடன் நினைக்கிறேன். எனது விசேஷமான நாளை, மறக்க முடியாத நாளாக ஆக்க நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன். சர்வதேச அளவில் இந்த வருடம் நாம் நோய்த்தொற்றுடன் போராடிக் கொண்டிருப்பதால் பாதுகாப்பு இன்றியமையாதது.

எனது பிறந்த நாளில் பொதுவில் என் ரசிகர்கள் யாரும் கூட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்".

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

'சரிலேரு நீக்கெவரு' படத்தைத் தொடர்ந்து பரசுராம் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் மகேஷ் பாபு. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE