‘பாகுபலி’ படத்துக்கு எதிராக மேலும் 3 வழக்குகள்: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

‘பாகுபலி’ திரைப்படத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேலும் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக ஆதிதமிழர் கட்சியின் அமைப்பு செயலர் சு.க.சங்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நலன் மனு:

தமிழக திரையரங்குகளில் ஓடிக்கொண் டிருக்கும் ’பாகுபலி’ திரைப்படத்தில் மகிழ்மதி பேரரசின் மீது காலகேயர்கள் படையெடுத்து வருகின்றனர். போர்க் களத்தில் காலகேயர்களிடம் கதாநாயகன் படைகள் பின்வாங்குகின்றன. அந்தச் சூழலில் தனது வீரர்களை மரணபயம் சூழ்ந்திருப்பதை அறியும் கதாநாயகன் ‘எது மரணம்’ என்ற தலைப்பில் தனது வீரர்களிடம் பேசும்போது, “எனது தாயையும், தாய் நாட்டையும் எந்த பகடைக்கு பிறந்தவனும் தொட முடியாது. பகடைகளைக் கிழித்து செங்குருதி குடித்து அறிவிக்கப்போகிறேன்” என கூறுகிறார். இதில் பகடை என்ற வார்த்தை தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் அருந்ததியினர் பிரிவில் உள்ள ஒரு சாதியைக் குறிப்பிடுகிறது.

காலகேயர்களை இழிவுபடுத்த அருந்த தியர்களைக் குறிக்கும் பகடை என்ற சாதிச் சொல்லை பயன்படுத்தியுள்ளனர். எதிரிகளை இழிவுபடுத்த தமிழில் பல வார்த்தைகள் இருக்கும்போது பகடை என்ற ஒரு குறிப்பிட்ட சாதிப் பெயரைப் பயன்படுத்தியது உள்நோக்கம் கொண்டது, அருந்ததியர்களை இழிவுபடுத்தும் செய லாகும். கோடிக்கணக்கானோர் பார்க்கும் திரைப்படத்தில் வசனகர்த்தா மதன் கார்க்கி இவ்வாறு வசனம் எழுதியது, அவரது உள்மனதில் உள்ள சாதி வெளிப் பாட்டினை காட்டுகிறது. இந்த வசனம் அருந்ததியர்களின் மனதை புண்படுத்தி யுள்ளது.

எனவே, வசனகர்த்தா மதன்கார்க்கி, திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தயாரிப்பாளர் இ.ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும். மேலும், ’பாகுபலி’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பகடை எனும் சொல்லை நீக்கவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆதி தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.ஜக்கையனும் அதே கோரிக்கையின் அடிப்படையில் ’பாகுபலி’க்கு தடை விதிக்கக் கோரி பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதி பதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பின், ஆக. 17-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய தகவல் ஒளி பரப்புத் துறை செயலர், தணிக்கை வாரியத் தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர், பாகுபலி தயாரிப்பாளர் இ.ஞானவேல்ராஜா, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, வசனகர்த்தா மதன்கார்க்கி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கெனவே பாகுபலி திரைப்படத்துக்கு எதிராக தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பேரறிவாளன், புரட்சிப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களும் நிலுவையில் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE