பொருளாதாரம் குறைவாக உள்ளது; கடன் வாங்கி செய்வேன்: பிரகாஷ்ராஜ் உறுதி

என்னிடம் பொருளாதாரம் குறைவாக உள்ளது, ஆனால் கடன் வாங்கி செய்வேன் என்று பிரகாஷ்ராஜ் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய காலத்திலேயே, தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்தார் பிரகாஷ்ராஜ். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டுக்குப் பாராட்டுகள் குவிந்தது. தற்போது தன் மனைவி, மகனுடன் பண்ணைவீட்டில் பொழுதைக் கழித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.

மேலும், தனது பிறந்த நாளன்று வீடின்றி தவித்துக் கொண்டிருந்த கூலிப் பணியாளர்களுக்குத் தங்க இடம் கொடுத்தார். மேலும், அவர்களுடைய குடும்பத்துக்குப் பணம் உதவியும் செய்தார். கரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கவே, பலரும் கடும் பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து தனது பிரகாஷ்ராஜ் அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்யத் தொடங்கினார். பல்வேறு இடங்களுக்குச் சென்று நலிவடைந்த குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே தற்போது பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என்னிடம் பொருளாதாரம் குறைவாக உள்ளது. ஆனால் கடன் வாங்கி தொடர்ந்து இதற்கான பணிகளைச் செய்வேன். ஏனென்றால் என்னால் மறுபடியும் சம்பாதிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். இந்த கடினமான தருணத்தில் மனிதநேயம் வாழ வேண்டும். ஒன்றிணைந்து போராடுவோம். அதற்கு மீண்டும் உயிர் கொடுப்போம். இது ஒரு பிரகாஷ் ராஜ் அறக்கட்டளையின் முன்னெடுப்பு"

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE