'ஆச்சாரியா' படத்திலிருந்து த்ரிஷா விலகியது ஏன்? - சிரஞ்சீவி விளக்கம்

'ஆச்சாரியா' படத்திலிருந்து த்ரிஷா விலகியதற்கான காரணத்தை சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராம் சரண் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'ஆச்சாரியா' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. ஒளிப்பதிவாளராக திரு, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன், இசையமைப்பாளராக மணிசர்மா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக த்ரிஷா நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சிரஞ்சீவி படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார் த்ரிஷா. அதில் கருத்து வேறுபாடுகள்தான் காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தற்போது கரோனா வைரஸ் அச்சத்தால் தெலுங்குத் திரையுலகம் சந்தித்துள்ள சோதனைகள், தொழிலாளர்கள் நலன் உள்ளிட்டவை குறித்து பேட்டியொன்றை அளித்துள்ளார் சிரஞ்சீவி.

அதில் 'ஆச்சாரியா' படத்திலிருந்து த்ரிஷா விலகியதற்கான கேள்விக்கு சிரஞ்சீவி பதில் அளிக்கையில், "அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. த்ரிஷா வருத்தமாகும் அளவு யாராவது ஏதாவது சொன்னீர்களா என எனது அணியினரைக் கேட்டேன். பின்னர், அவர் மணிரத்னம் படத்தில் நடிக்கிறார். அதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படுகிறது. அதனால்தான் எங்கள் படத்தில் நடிக்க முடியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்" என்றார் சிரஞ்சீவி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE