இப்படி ஒரு நிலை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்று இயக்குநர் ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 2000 பேரை நெருங்கிவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இதனால், இந்தியா முழுக்க எந்தவொரு பணியும் நடக்கவில்லை. பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதனிடையே தற்போது இந்த 21 நாட்கள் ஊரடங்கு குறித்து பேட்டியொன்றில் பேசியுள்ளார் இயக்குநர் ராஜமௌலி.
இந்த ஊரடங்கு உத்தரவு குறித்து ராஜமௌலி கூறியிருப்பதாவது:
» கரோனா வைரஸ் பாதிப்பு: ஜே.எஸ்.கே முன்வைக்கும் 4 முக்கிய கோரிக்கைகள்
» காவல்துறையினர், மருத்துவர்களுக்கு பாரதிராஜா உதவி: தமிழக அரசுக்கும் பாராட்டு
"எல்லாம் மிக வேகமாக நடந்துவிட்டது. சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே மிகவும் கடினமாக இருக்கிறது. இப்படி ஒரு நிலை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எந்தப் பிரச்சனையுமின்றி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். திட்டமிட்டபடி எல்லாம் முடியும் தருவாயில் இருந்தன.
திடீரென செய்திகள் வரத்தொடங்கின. அவையெல்லாம் வதந்திகள் என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் திடீரென நம் வீட்டு வாசலுக்கே வந்துவிட்டது. இரண்டு நாட்களில் படப்பிடிப்புகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு வந்தது. அதன் பிறகு பிரதமரிடமிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என்று அறிவிப்பு வந்தது. அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்துகொண்டிருந்தோம். ராம் சரண் பிறந்த நாளுக்கு மோஷன் போஸ்டர் வெளியிட்டது என அனைத்தும் குழப்பமாகி விட்டது"
இவ்வாறு இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.