சிரஞ்சீவியுடன் இணையும் மகேஷ் பாபு: தெலுங்கு திரையுலகினர் ஆச்சரியம்

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராம்சரண் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும். ஒளிப்பதிவாளராக திரு, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன், இசையமைப்பாளராக மணிசர்மா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

பிரம்மாண்டமாக அரங்குகள் அமைத்து, பெரும்பகுதி படப்பிடிப்பை அதிலேயே முடிக்க திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறது படக்குழு. இந்த அரங்கிற்கு மட்டுமே பல கோடிகளைச் செலவழித்து உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக த்ரிஷா நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதனிடையே, இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ராம் சரண் நடிப்பதாக இருந்தது. ஆனால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தேதிகளில், ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளது. ஆகையால் இதில் ராம்சரண் நடிக்க முடியாமல் போனது.

இந்த முக்கியமான கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடித்தால் எப்படியிருக்கும் என்று இயக்குநர் கொரட்டலா சிவா கேட்டுள்ளார். ஏனென்றால், மகேஷ் பாபு நடித்த 'பரத் அனே நேனு' என்ற பெரும் வரவேற்புப் பெற்ற படத்தை இயக்கியவர் கொரட்டலா சிவா. இதனால், படக்குழுவினர் ஒ.கே சொல்ல மகேஷ் பாபுவுடன் பேசியுள்ளார் கொரட்டலா சிவா.

சிரஞ்சீவியுடன் நடிக்கத் தயார் என்று மகேஷ் பாபுவும் கூற, கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக மகேஷ் பாபுவுக்கு பெரும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதற்காக 30 நாட்கள் தேதிகள் ஒதுக்கியுள்ளார் மகேஷ் பாபு. தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு, எவ்வித தயக்கமுமின்றி சிரஞ்சீவி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதைத் தெலுங்கு திரையுலகினர் பெரும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.

சிரஞ்சீவியுடன் மகேஷ் பாபு நடிக்கவுள்ளது குறித்த அறிவிப்பை, பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE