மது போதையில் நடிகர் ராஜசேகர் பேச்சு: சிரஞ்சீவி ஆக்ரோஷம் - தெலுங்கு நடிகர் சங்க நிகழ்ச்சியில் சர்ச்சை 

By செய்திப்பிரிவு

தெலுங்கு நடிகர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் மது போதையில் நடிகர் ராஜசேகர் பேசிய பேச்சு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இதனைக் கண்டித்து சிரஞ்சீவியும் ஆக்ரோஷமாகப் பேசினார்.

மா என்று அழைக்கப்படும் தெலுங்கு சினிமாவச் சேர்ந்த கலைஞர்கள் சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான டைரி வெளியீடு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, மோகன்பாபு, முரளி மோகன், கிருஷ்ணம் ராஜு, ஜெயசுதா உள்ளிட்ட மூத்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் சிரஞ்சீவி பேசும்போது அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு நிதி திரட்டுவதன் முக்கியத்துவம் பற்றி பேசினார். மேலும், தெலங்கானா முதல்வர் தெலுங்கு சினிமாத் துறையின் வளர்ச்சிக்கு உதவத் தயாராக இருப்பதாகவும், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சண்டையிடாமல் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்து, கதாசிரியர் பருசூரி கோபால கிருஷ்ணன் பேசுவதற்கான வாய்ப்பு வரும்போது சங்கத்தின் நிர்வாகத் தலைவர் நடிகர் ராஜசேகர் அவரைப் பேச விடாமல் அவரிடமிருந்து மைக்கைப் பறித்துப் பேச ஆரம்பித்தார். ராஜசேகர் மது போதையில் இருக்கிறார் என்பது அவர் பேசும்போது மிகத் தெளிவாகத் தெரிந்தது.

நடிகை ஜெயசுதா, ராஜசேகரைப் பேச வேண்டாம் என்று தன்மையாகக் கேட்டபோதும் ராஜசேகர் அதற்கு செவி சாய்க்கவில்லை. ராஜசேகர் பேச ஆரம்பிக்கும் போதே, மேடையிலிருந்த நடிகர்கள் சிரஞ்சீவி, கிருஷ்ணம் ராஜு, மோகன்பாபு உள்ளிட்ட நடிகர்களில் காலைத் தொட்டு வணங்கினார். இதுவே அங்கிருப்பவர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கியது.

தொடர்ந்து ராஜசேகர் பேசுகையில், தான் சங்கத்தில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அதைப் பற்றியே நினைத்து தன்னை வருத்தி வேலை செய்து வருவதாகவும், இதனால் தனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது என்றும், சமீபத்தில் தனது பென்ஸ் கார் விபத்து கூட இந்தப் பணி அழுத்தத்தின் காரணமாகவே ஏற்பட்டது என்றும் கூறினார். மேலும் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும் சிரஞ்சீவி பேசியதை விமர்சித்த ராஜசேகர், சங்கத்தின் 26 உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை, நெருப்பு இருந்தால் புகை வரும், சங்கத்தின் பிரச்சினைகளைத் தான் மறைக்க விரும்பவில்லை என்றும் தொடர்ந்து பேசிக் கொண்டே போனார்.

இப்படி எல்லோர் முன்னிலையிலும் இதைப் பேச வேண்டாம் என நடிகர்கள் மோகன்பாபுவும், சிரஞ்சீவியும் தடுக்க முயன்றபோதும் ராஜசேகர் அவர்களை எதிர்க் கேள்வி கேட்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.

ராஜசேகர் பேசி முடித்ததும் அவராக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். பின்பு சிரஞ்சீவி பேசிக்கொண்டிருக்கும் போது மீண்டும் உள்ளே வந்து சத்தமாகப் பதிலளித்து விட்டுச் சென்றார்

ராஜசேகரின் இந்தச் செயலால் கடுமையான கோபத்துக்கு ஆளான சிரஞ்சீவி இப்படியான பொது நிகழ்ச்சிகளில் யாரும் நிதானத்தை இழக்கக்கூடாது என்றும், உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை ஆரோக்கியமான முறையில் சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும், சங்கத்துக்குள் நடக்கும் பிரச்சினை வெளியே போகாமல் உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும், ராஜசேகர் இப்படி சர்ச்சையை உருவாக்குவது திட்டமிட்ட செயல். மேலும் ராஜசேகர் மீது சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசி முடித்தார்.

ராஜசேகரின் மனைவியும், சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகை ஜீவிதா ராஜசேகர் பேசுகையில், தன் கணவரால் ஏற்பட்ட சூழலுக்கு மன்னிப்புத் தெரிவித்து சங்கத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

சங்கத்தின் தலைவரான நரேஷுக்கும், நடிகை ஜீவிதா - நடிகர் ராஜசேகர் தம்பதிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவமும் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE