நடிகை டாப்ஸி ஆனந்தோ ப்ரஹ்மா என்ற தெலுங்குபடத்தில் சம்பளமின்றி நடித்துள்ளார். அதற்கு பதிலாக லாபத்தில் பங்கு பெறவுள்ளார். இது தென்னக சினிமா துறையில் நடக்காத விஷயம் என சொல்லப்படுகிறது.
டாப்ஸி நடிப்பில் ஆனதோ ப்ரஹ்மா என்ற நகைச்சுவை திகில் திரைப்படம் வெளியாகி விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மனிதர்களைப் பார்த்து பேய்கள் பயப்படும் வித்தியாசமான கதை இது. இந்தப் படத்தின் கதையைக் கேட்ட டாப்ஸி, படத்தில் ஹீரோவுக்கான இடம் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்.
ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லாத கதைக்கு பட்ஜெட் குறைவாக இருக்கும் என்பதால் மேற்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு சிரமம் தர விரும்பாமல், சம்பளம் பெறாமலே நடித்துள்ளார். அதற்கு பதிலாக வரும் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என ஒப்பந்தம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி நடிக்காமல் வித்தியாசமாக ஏதாவது நடிக்க வேண்டும் என்ற நிலையில் நான் இன்று இருக்கிறேன். அப்படி வித்தியாசமாக நடிக்க இது ஒரு வாய்ப்பென்றால், சம்பளத்தை மட்டுமே காரணமாகக் கொண்டு என்னால் பின்வாங்க முடியாது.
நான் இந்த கதையை மனப்பூர்வமாக நம்பினேன். துணிந்து இதில் இறங்கலாம் என முடிவெடுத்தேன்." என்றார்.
டாப்ஸியின் துணிச்சலுக்கு பலன் கிடைத்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.