அக்டோபர் 23-ம் தேதி பாகுபலி 2 பர்ஸ்ட் லுக்

நாயகன் பிரபாஸ் பிறந்த நாளான அக்டோபர் 23-ம் தேதி 'பாகுபலி 2' பர்ஸ்ட் லுக் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.

உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்த இப்படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக சுமார் 1000 துணை நடிகர்களோடு காட்சிப்படுத்தி வருகிறார் ராஜமெளலி.

'பாகுபலி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஒவ்வொரு பாத்திரம் அறிமுகத்தையும் ஒரு போஸ்டர் வடிவமைப்பாக முதல் பாகத்தில் வெளியிட்டார் ராஜமெளலி.

தற்போது நாயகன் பிரபாஸ் பிறந்த நாளான அக்டோபர் 23-ம் தேதி 'பாகுபலி 2' பர்ஸ்ட் லுக் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. அடுத்தாண்டு ஏப்ரல் 28-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி 2'வில் விடை தெரியவிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE