'லூசிபர்' எனப் பெயரிடப்பட்டுள்ள மலையாள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் ப்ருத்விராஜ்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ப்ருத்விராஜ். தமிழிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் இயக்குநராக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
'லூசிபர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறது. இப்படத்துக்கு முரளி கோபி திரைக்கதை எழுத இருக்கிறார்.
மறைந்த மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளை மற்றும் முரளி கோபி இருவரும் இணைந்து உருவாக்கியது 'லூசிபர்'. இருவருமே அக்கதையை நீண்ட நாட்களாக படமாக்க முயற்சி செய்து வந்தார்கள். இறுதியாக ப்ருத்விராஜ் மூலமாக இக்கதை உருவாக இருக்கிறது.
இப்படத்தில் மோகன்லால் உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.