பவன் கல்யாண் படத்தில் இருந்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா விலகல்

பவன் கல்யாண் படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து எஸ்.ஜே.சூர்யா விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக டோலி இயக்கவிருக்கிறார்.

'இறைவி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. தமிழில் விஜய்யை சந்தித்து, கதை விவாதம் நடைபெற்றது. ஆனால், பரதன் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடிக்கவே, அப்படத்துக்கு தேதிகள் ஒதுக்கி படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

தான் விஜய்யிடம் கூறிய அதே கதையை பவன் கல்யாணிடம் தெரிவித்து, அதன் பணிகளைத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. பாடல் பணிகள், படப்பிடிப்புக்கு இடங்கள் தேர்வு என படவேலைகள் மும்முரமாக தொடங்கி படப்பூஜையும் நடைபெற்றது.

'இறைவி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைக்க, ஏ.ஆர். முருகதாஸ் - மகேஷ்பாபு இணையும் படத்தின் வில்லனாக ஒப்பந்தமானார் எஸ்.ஜே.சூர்யா. இதனால் பவன் கல்யாண் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பவன் கல்யாண் படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து எஸ்.ஜே.சூர்யா விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக 'கோபாலா கோபாலா' டோலி இயக்குநர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபு படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE