கன்னட ஒளிப்பதிவாளர் சுதர்னாத் சுவர்ணா காலமானார்

By செய்திப்பிரிவு

கன்னடத் திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சுதர்னாத் சுவர்ணா, இன்று காலை பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 60.

கடந்த சில மாதங்களாக கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார் சுதர்னாத். அவரது இறுதிச் சடங்கு, அவரது சொந்த ஊரான மங்களூரில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுதர்னாத், சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். மங்களூரில் தன் தந்தையுடன் ஜவுளித் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த சுதர்னாத் சுவர்ணா, அங்கிருந்தே தனது புகைப்பட ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். கன்னடத் திரையுலகுக்கு புகைப்படக்காரராக நுழைந்தார்.

'அபரூபட அதிதிகளு' என்கிற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான சுதர்னாத், பிறகு 'ஆரம்பா' படத்தில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாறினார். இதோடு சேர்த்து, அக்னி பார்வா, நீனன்னா தய்வா, டைகர் கங்கு, கிலாடி டாடா ஆகிய படங்களை இயக்கியும், ஹல்லியதரேனு சிவ என்கிற படத்தை தயாரித்தும் உள்ளார்.

கன்னட திரையுலகுக்கு அவர் ஆற்றிய பணிக்காக, சமீபத்தில் அவருக்கு கர்னாடக ராஜ்யோத்ஸ்வ விருதினை வழங்கி கர்னாடக அரசு கவுரவித்தது. சுதர்னாத் சுவர்ணாவின் மரணத்திற்கு, கர்னாடக முதல்வர் சித்தராமைய்யா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE