அடுத்த ஆண்டு ஏப்.28-ல் வெளியாகிறது பாகுபலி 2

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பாகுபலி - தி கன்க்ளூஷன்' ஏப்ரல் 28, 2017-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.

உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், 'பாகுபலி 2' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'வில் விடை தெரியவிருக்கிறது. தற்போது 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்தியில் இப்படத்தை வெளியிடும் க்ரண் ஜோஹர், "தர்மா தயாரிப்பு நிறுவனம், மீண்டும் ராஜமெளலியின் கனவுகளோடு இணைந்திருக்கிறது. 'பாகுபலி தி கன்க்ளூஷன்' திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் வெளியாகும்" என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

இப்படத்தின் தமிழக உரிமை சுமார் 45 கோடிக்கு விலை போயிருக்கிறது. யார் வாங்கியுள்ளார்கள் என்பதை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE