வினய விதேய ராமா சோகம்: அதிக கலாய்ப்பினால் காட்சி நீக்கம்

பொங்கலை முன்னிட்டு ராம் சரண் நடிப்பில், போயப்பாடி சீனு இயக்கத்தில் வெளியான படம் 'வினய விதேய ராமா'.

வெளியான முதல் காட்சியிலிருந்து இந்தப் படம் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. அந்த அளவு அபத்தமான ஹீரோயிசக் காட்சிகள் படத்தில் நிறைந்திருந்தது. ராம் சரண் தேஜாவின் ரசிகர்களே கோபம் கொள்ளும் அளவுக்கு இருந்த இந்தப் படத்தின் காட்சிகளை வைத்து பல மீம்ஸும் உருவானது.

இன்னும் சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய், வேண்டுமென்றே ஸ்ரீனு ராம் சரணை வைத்து இப்படியான ஒரு அபத்தக் களஞ்சியத்தை இயக்கி தோல்வியடையச் செய்துள்ளார் என்று அவரை வசை பாடி வருகின்றனர்

படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், துவாரகாவிலிருந்து கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிஹாருக்கு, நாயகன் ராம் இரண்டே நிமிடங்களில் பயணப்படுகிறார். அதுவும் விமான நிலையத்தின் கண்ணாடியை உடைத்து, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் மேல் குதித்து, நின்று கொண்டே பிஹார் செல்கிறார். பின் குதிரை சவாரி செய்து வில்லனின் இடத்துக்குச் சென்று அவரது அடியாட்களின் தலையைச் சீவ, மேலே பறக்கும் இரண்டு தலைகளைப் பறந்து கொண்டிருக்கும் பருந்துகள் கொத்திச் செல்கின்றன.

இது போல படத்தில் லாஜிக்கை மட்டுமின்றி நம் கற்பனையையும் மீறிய காட்சிகள் நிறைய இருந்ததால் தொடர்ந்து இவற்றைக் குறிப்பிட்டு பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது அதிக கலாய்ப்புகளின் காரணமாக, மேலே குறிப்பிட்டுள்ள அந்த ரயில் காட்சி மட்டும் படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. 

ஆனால் படம் மொத்தமுமே இந்த கதியில் இருக்கும் போது ஒரு காட்சியை மட்டும் நீக்குவது நியாயமா என்கிற ரீதியில் இதையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE