எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம்: பூஜையுடன் இன்று தொடக்கம்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கியது.

‘பாகுபலி’ என்னும் பிரம்மாண்ட படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி. இரண்டு பாகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 400 கோடியில் தயாரிக்கப்பட்டன. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது இந்தப் படங்கள்.

தற்போது தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். - ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். இந்தப் படம், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது.

ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், தற்போதைக்கு இந்தப் படத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று (நவம்பர் 11) தொடங்கியது.

இதில், சிரஞ்சீவி கலந்துகொண்டு, க்ளாப் அடித்து பூஜையைத் தொடங்கி வைத்தார். மேலும், ‘பாகுபலி’ நாயகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதியும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அடுத்த ஆண்டு (2019) தீபாவளிக்குப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE