3 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்

By செய்திப்பிரிவு

'பாரனே' என்னும் படம் கர்நாடகா மற்றும் கேரளா எல்லையை அடிப்படையாகக் கொண்டு கொடவா மொழியில் வெறும் 3 லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

92 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும், குடகு மாவட்டத்தில் உள்ள பாரனே கிராமத்தில் நடந்துள்ளது.

படத்துக்காக நடிகர், நடிகையர் யாரையும் ஒப்பந்தம் செய்யாமல் கிராம மக்களையே நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சனல் குமார் சசிதரன். மொத்தப் படமும் 8 ஷாட்டுகளில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் சராசரியாக 11 நிமிடங்கள் நீள்கின்றன. கதை எதையும் எழுதி வைக்காமலே படமாக்கியிருக்கிறது படக்குழு.

பாரனே கிராமத்தை வெளியாட்கள் அபகரிக்க முயற்சிப்பதும் அதற்கு எதிராக உள்ளூர் கிராமவாசிகளின் போராட்டமுமே படத்தின் கதை. இப்படத்தைக் கேரளாவில் பிறந்து, பெங்களூருவில் வசிக்கும் ஸ்ரீலேஷ் நாயர் தயாரித்துள்ளார்.

முதன்முதலில் கொடவா மொழியில் உருவான சிறிய பட்ஜெட் படமான 'பாரனே' இந்தோனேசிய திரைப்பட விழாவிலும், பெர்லின் திரைப்பட விழாவிலும் திரையிடத் தேர்வாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE