விஜய் தேவரகொண்டாவைப் பாராட்டிய எஸ்.எஸ்.ராஜமெளலி

‘கீதா கோவிந்தம்’ படத்தைப் பார்த்துவிட்டு விஜய் தேவரகொண்டாவைப் பாராட்டியுள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கீதா கோவிந்தம்’. பரசுராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராஷ்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். நித்யா மேனன், அனு இம்மானுவேல் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

‘அர்ஜுன் ரெட்டி’ வெற்றியால், இந்தப் படத்துக்குப் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று இந்தப் படம் ரிலீஸானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமெளலியும் படத்தைப் பாராட்டியுள்ளார்.

“கீதா கோவிந்தம் படம், நகைச்சுவைக் கலவரமாக இருந்தது. ‘அர்ஜுன் ரெட்டி’க்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத, ஆனால் சரியான தேர்வை செய்துள்ளார் விஜய் தேவரகொண்டா. தான் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவாக உள்ளார். படம் முழுவதும் சின்னச் சின்ன நுட்பங்களும், வேடிக்கையான தருணங்களும் நிறைந்துள்ளன. பரசுராம் சிறப்பாகப் படத்தை இயக்கியுள்ளார்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக ‘டாக்ஸிவாலா’ என்ற படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘நோட்டா’ என்ற படத்திலும், தெலுங்கில் உருவாகும் ‘டியர் காம்ரேட்’ என்ற படத்திலும் தற்போது அவர் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE