பாலியல் வழக்கில் நடிகர் இடவேள பாபு கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!

By செய்திப்பிரிவு

கொச்சி: கொச்சியைச் சேர்ந்த பெண் நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரில் மலையாள நடிகர் இடவேள பாபு புதன்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் சுரண்டல்களை வெளிக்கொண்டு வந்தது ஹேமா கமிட்டி அறிக்கை. மலையாள நடிகைகள் பட வாய்ப்புக்காக பல முறை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் அடுத்தக்கட்ட நகர்வாக பல நடிகைகளும் வெளியில் வந்து தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் மலையாள நடிகர் சித்திக், இடவேள பாபு, கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்ட நடிகர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குப்பதிவு அடிப்படையில் நேற்று (செப்.24) நடிகரும், கொல்லம் தொகுதி எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதே போல இன்று, நடிகர் இடவேள பாபுவிடம் சிறப்பு புலனாய்வு குழு கொச்சியில் உள்ள தலைமையகத்தில் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து இடவேள பாபு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இடவேள பாபு மீது பாலியல் வன்கொடுமை, பெண்களை அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று (செப்.24) நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள சித்திக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விரைவில் அவர் கைதாவார் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்