தெலங்கானா வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகள்: பவன் கல்யாண் ரூ.1 கோடி நிதி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ரூ.1 கோடியை முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டியை, பவன் கல்யாண் புதன்கிழமை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தெலங்கானா வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் வழங்கினார். ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார் பவன்.

முன்னதாக ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பவன் கல்யாண் அறிவித்திருந்தார். மேலும் பணம் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

பவன் கல்யாண் - ரேவந்த் ரெட்டி சந்திப்பின்போது இரு தலைவர்களும் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் பிற விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாணும், தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE